×

வாழ்வில் இன்னல்கள் அகன்று வளம் பெற சொரிமுத்து அய்யனார் கோயில்

தென்னாட்டில் பழங்காலத்தில் பண்டமாற்று வணிக முறை இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ள பகுதியில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொதி மாடுகளின் ஓயாத குளம்படிபட்டு ஒரு பாறையில் ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட வணிகர்கள் அதிர்ச்சியடைந்த போது அசரீரி ஒன்று, ரத்தம் பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனிவரும் காலத்தில் மகாலிங்க சுவாமியை சொரிமுத்தய்யன், சங்கிலிமாடன், பிரம்மராட்சசி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சூழ கோயில் கட்டுமாறு கூறியது. அதன்படி சொரிமுத்து அய்யனார் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

பார்வதி, பரமேஸ்வரர் திருக்கல்யாண காட்சியை காண தேவர்கள், முனிவர்கள் அனைத்து உயிர்களும் வடதிசை வந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன்நிலைப்படுத்த அகஸ்தியர் தென்திசைக்கு வந்தபோது சொரிமுத்து அய்யனார் கோயில் இருக்கும் பகுதியில் அகஸ்தியர் நீராடி பூஜைகளை முடித்து யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஜோதி ஒன்று தோன்றியது கண்டு அதிசயித்து தனது ஞானதிருஷ்டியால் பார்க்க சொரிமுத்து அய்யனார் அகஸ்தியருக்கு பரிவார தேவதைகளுடன் காட்சி கொடுத்தார். அவரை மலர் சொரிந்து பூஜிப்பவர்கள் வாழ்வில் இன்னல்கள் அகன்று வளம் பெற அகத்தியர் வேண்டினார்.

இக்கோயிலில் சொரிமுத்து அய்யனார், தாயார்கள் புஷ்கலை, பூர்ணகலை பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் உள்ளது. இலுப்பை மரம் தலவிருட்சமாக உள்ளது. வறட்சி ஏற்படும் காலத்தில் சாஸ்தாவுக்கு புனிதநீர் சொரிந்து அபிஷேகம் செய்ய, மழை பொழிய வைத்ததால் சொரி முத்து அய்யனார் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் செருப்புகளை பட்டவராயர் பயன்படுத்துவதாக ஐதீகம்.

தினமும் காலை 6 மணி, மாலை 5.30 மணிக்கு பூஜைகள் நடக்கிறது. ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இக்கோயில் உள்ள பொதிகை மலை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் உள்ளது. நெல்லையில் இருந்து மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக 70 கிமீ தூரத்தில் உள்ளது. நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து கோயிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்களில் செல்வோர் வனத்துறையிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

Tags : Sariumuthu Aiyanar Temple ,
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!